செய்திகள்
தாக்குதல்

வம்பாகீரப்பாளையத்தில் பஞ்சாயத்து தலைவர் மீது தாக்குதல்: 5 பேருக்கு வலைவீச்சு

Published On 2019-10-16 16:51 GMT   |   Update On 2019-10-16 16:51 GMT
புதுவையில் பெண்களை கிண்டல் செய்தவர்களை தட்டிக்கேட்டவர்களை தாக்கிய 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

புதுச்சேரி:

புதுவை வம்பா கீரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 57). இவர் பஞ்சாயத்து தலைவராக இருந்து வருகிறார். இதே ஊரை சேர்ந்த அன்பு, வேலவன் ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதன் காரணமாக பஞ்சாயத்து கூட்டப்பட்டது.

இதில், ஜெயக்குமார், மணிமாறன், சூர்யா, மதியழகன், விசாகன் ஆகிய 5 பேர் மது போதையில் பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளை கிண்டல் செய்வதாக முருகேசனிடம் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் முருகேசன் ஊர் பஞ்சாயத்தில் அந்த 5 பேரையும் கண்டித்ததாக தெரிகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த 5 பேர் கொண்ட கும்பல் முருகேசனை தகாத வார்த்தைகளால் திட்டியும், கையாலும், தடியாலும் தாக்கியது.

இதனை தடுக்க முயன்ற குமாரவேல் மற்றும் அரிதாசையும் அந்த கும்பல் கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

இதில் காயம் அடைந்த குமாரவேல் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

மேலும் இது குறித்து முருகேசன் ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய 5 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News