மோட்டார் சைக்கிள் மோதிய விபத்து: படுகாயம் அடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த வடக்கு பள்ளிய மேடு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அரசப்பன்(வயது25). கூலித் தொழிலாளியான இவர் உதயமார்த்தாண்டபுரம் கடைதெருவில் இருந்து ஊருக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கிவீசப்பட்ட அரசப்பன் பின்பக்க தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அரசப்பனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் கொண்டு சென்று திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதுகுறித்து முத்துப்பேட்டை சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மோட்டார் சைக்கிளில் மோதிவிட்டு தப்பிய அடையாளம் தெரியாத நபரை தேடிவந்தனர்.
இந்த நிலையில் தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரசப்பன் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். இதுகுறித்து முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் இறந்த அரசப்பன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார்.