செய்திகள்
கொலை

ஆண்டிப்பட்டி அருகே விவசாயி கொலை செய்யப்பட்டதாக மகன் புகார்

Published On 2019-10-16 10:59 GMT   |   Update On 2019-10-16 10:59 GMT
ஆண்டிப்பட்டி அருகே நிலப்பிரச்சினையில் தனது தந்தையை அடித்து கொன்று விட்டதாக மகன் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே உள்ள தும்மக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சடையன் (வயது 55). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மொக்கேட் என்பவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று வைகை ஆற்று பாலம் அருகே உள்ள தேக்குமரத்தில் சடையன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து வரு‌ஷநாடு போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து சடையன் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சடையனின் மகன் வீரணன் வரு‌ஷநாடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தனது தந்தை தற்கொலை செய்ய வாய்ப்பு இல்லை. அவரை நிலப்பிரச்சினை காரணமாக மொக்கேட், அவரது மனைவி மலர்விழி, மகன் லோகு மேலும் அவரது உறவினர்கள் சேர்ந்து கொலை செய்திருக்க வேண்டும்.

எனவே இப்பிரச்சினையில் உரிய முறையில் விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News