செய்திகள்
வெல்லம்

தீபாவளியை முன்னிட்டு வெல்லம் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

Published On 2019-10-16 10:18 GMT   |   Update On 2019-10-16 10:18 GMT
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் ஆலைக்கொட்டகைகளில் உருண்டை மற்றும் அச்சு வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வேலாயுதம்பாளையம்:

கரூர் மாவட்டம், முத்தனூர், கவுண்டன்புதூர், நடையனூர், கரைப்பாளையம், நொய்யல், சேமங்கி, கொளத்துப்பாளையம், வேட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். நிலத்தில் கரணை பதித்தவுடன் பல விவசாயிகள் புகளூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டிச் செல்வதற்கு பதிவு செய்கின்றனர். பதிவு செய்யாத விவசாயிகள் கரும்பு விளைந்தவுடன் பல்வேறு பகுதிகளில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலை அதிபர்களுக்கு கரும்பு ஒன்று ரூ.2400 வரை விற்பனை செய்கின்றனர்.

வாங்கிய கரும்புகளை இயந்திரத்தின் மூலம் சாறு பிழிந்து இரும்பு கொப்பரையில் ஊற்றி காய வைத்து சரியான பதம் வந்து பாகு ஆனவுடன், மர அச்சுத்தொட்டியில் ஊற்றி உலர வைத்து குப்பிர கவிழ்த்தி மர சுத்தியால் தட்டுகிறனர். அதிலிருந்து அச்சு வெல்லம் விழுகிறது. அதே போல் மரத்தொட்டியில் கரும்பு பாகுவை ஊற்றி உலர வைத்து துணிகள் மூலம் உருண்டை பிடித்து உருண்டை வெல்லம் தயாரிக்கின்றனர்.

பின்னர் நன்கு உலரவைத்து சாக்குகளில் 30 கிலோ கொண்ட சிப்பங்களாக தயார் செய்கிறனர். தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை வியாபாரிகள் வாங்கி லாரிகள் மூலம் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்ராஞ்சல், உத்தரப்பிரதேசம், சண்டிகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.

பொதுமக்கள் வெல்லத்தின் மூலம் தீபாவளி பண்டிகைக்கு பல்வேறு இனிப்பு வகை பலகாரங்கள் செய்வார்கள். அதனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் வெல்லம் விற்பனை அதிக அளவில் இருக்கும். இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் ஆலைக் கொட்டகைகளில் உருண்டை மற்றும் அச்சு வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தயார் செய்யப்படும் வெல்லங்கள் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

Tags:    

Similar News