செய்திகள்
திருமாவளவன்

சீமானின் கோபம் சரியானது தான்- திருமாவளவன்

Published On 2019-10-16 05:54 GMT   |   Update On 2019-10-16 05:54 GMT
ராஜீவ் கொலை குறித்து பேசிய சீமானின் கோபம் சரியானது தான் என்று தூத்துக்குடியில் திருமாவளவன் எம்.பி. கூறியுள்ளார்.
தூத்துக்குடி:

நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் நிரூபர்களிடம் அவர் கூறியதாவது:-

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வாக்கு சேகரிக்க உள்ளோம். 2 தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் மகத்தான வெற்றியை பெறுவார்கள்.

ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என எந்த இடத்திலும் விடுதலைப் புலிகள் கூறியதில்லை. அதேபோல இந்திய அரசாங்கத்தை அல்லது காங்கிரஸ் கட்சியை, மாவீரர்நாள் கூட்டங்களில் ஒருபோதும் பிரபாகரன் விமர்சனம் செய்ததில்லை.

ராஜீவ் கொலையில் சர்வதேச சதி இருக்கிறது என்பதை ஏற்கனவே பலரும் சொல்லியிருக்கிறார்கள். அந்தப்பழி விடுதலைப்புலிகளின் மீது சுமத்தப்பட்டுவிட்டது. இதுதான் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி தலைவர்களின் கருத்து. பிரபாகரனின் கருத்தும் கூட.

இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டுக்கு அல்லது அரசியல் கோட்பாட்டுக்கு எதிரான ஒரு கருத்தை நாம் சொல்லுவது ஈழத்தமிழர்களின் மீதுள்ள பற்று மற்றும் பாசத்தை வெளிப்படுத்துவதாக அமையாது.

ஐ.பி.கே.எப். மீது அனைவருக்குமே அதிருப்தி உண்டு. ஐ.பி.கே.எப்.யை அனுப்ப சொன்னதும் தமிழ்நாட்டு மக்கள், ஈழமக்கள். ஆனால் ஐ.பி.கே.எப். போன பிறகு அதன் மீது கடுமையான அதிருப்தி ஏற்பட்டது. முதன்முதலாக இந்திய அமைதிப்படையை எதிர்த்து உயிர் பலியானவர் தோழர் மாலதி.



இந்திய அமைதிப்படையின் மீது சிங்களர்களுக்கும் கோபம் இருந்தது. தமிழர்களுக்கும் கோபம் இருந்தது. அந்த வகையில் சீமானின் கோபம் அதோடு பொருந்தக்கூடியதுதான், சரிதான். ஆனாலும் விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டுக்கு எதிரான கருத்தை நாம் சொல்லும் போது எச்சரிக்கையாக இருக்கவேண்டும். மிக கவனமாக இருக்க வேண்டும்.

விடுதலைப்புலிகள் பிரபாகரன் கூட ஒரு நாளும் இந்திய அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை கூறியதில்லை. இந்திய அரசை பகைத்துக் கொள்ளாத ஒரு அணுகுமுறையைதான் அவர் கையாண்டார்.

மணல் கொள்ளை அடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மணல் மாபியா கும்பலின் மீது நடவடிக்கை எடுக்காமல் அதை எதிர்த்து மக்களோடு இணைந்து போராடிய விடுதலை சிறுத்தைகள் மீது பொய் வழக்கு போட்டு அவர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைப்பது போன்ற நடவடிக்கைகளில் தமிழக காவல்துறை ஈடுபட்டு வருகிறது. இந்த போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாக கண்டிக்கிறது.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
Tags:    

Similar News