செய்திகள்
காங்கிரஸ்

கோவில்பட்டியில் நாம் தமிழர் கட்சியை தடை செய்ய கோரி காங்கிரசார் நூதன போராட்டம்

Published On 2019-10-15 14:53 GMT   |   Update On 2019-10-15 14:53 GMT
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை பற்றி பேசிய சீமான் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் சார்பில் நுதன போராட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி:

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை பற்றி பேசிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்தும், அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் படத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட துணைத்தலைவர் வழக்கறிஞர் அய்யலுசாமி தலைமையில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

இதையொட்டி முகம் முழுவதும் கருப்பு துணியை அணிந்து, உடலில் ராஜீவ்காந்தி உருவ படத்தினை தாங்கியவாறு கோட்டாட்சியர் அலுவலக வாயில் முன்பு பாய் விரித்து படுத்து உறங்கி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில் காங்கிரஸ் கட்சியின் நகர செயலாளர் சண்முகராஜ், கயத்தார் ஒன்றிய தலைவர் செல்லத் துரை, முன்னாள் மாவட்ட தலைவர் காமராஜ், மாவட்ட பொது செயலாளர் முத்து, துணை தலைவர் ராமச்சந்திரன், வர்த்தக பிரிவு தலைவர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இதனைத்தொடர்ந்து கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயாவிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பெற்று கொண்ட கோட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த நூதன போராட்டத்தினால் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News