செய்திகள்
கயத்தாறு அருகே லாரி மீது கல்லூரி பேருந்து மோதல்: 9 மாணவ-மாணவிகள் காயம்
கயத்தாறு அருகே லாரி மீது கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் 9 மாணவ-மாணவிகள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கயத்தாறு:
கயத்தாறு டோல்கேட் அருகே தனியார் காற்றாலைக்கு சொந்தமான லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் ஒரு தனியார் கல்லூரி பேருந்து வந்து கொண்டிருந்தது. லாரி அங்குள்ள சர்வீஸ் ரோட்டில் திரும்ப முயன்ற போது பின்னால் வந்து கொண்டிருந்த பஸ் அந்த லாரி மீது மோதியது.
இதில் பஸ்சில் இருந்த 7 மாணவிகள் மற்றும் 2 மாணவர்கள் காயம் அடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கயத்தாறு போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு கயத்தாறு அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கயத்தாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.