செய்திகள்
கோப்புப்படம்

விபத்தில் கையை இழந்த வாலிபருக்கு ரூ.52 லட்சம் நஷ்டஈடு- மோட்டார் வாகன தீர்ப்பாயம் உத்தரவு

Published On 2019-10-15 09:58 GMT   |   Update On 2019-10-15 09:58 GMT
ஆற்காடு சாலையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கையை இழந்த வாலிபருக்கு ரூ.52 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று மோட்டார் வாகன தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சென்னையை சேர்ந்தவர் சவுந்தரராஜன். போட்டோ கிராபராக இவர் தனியார் நிறுனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 25-ந்தேதி சவுந்தரராஜன் தனது மோட்டார் சைக்கிளில் ஆற்காடு சாலையில் சென்று கொண்டிருந்தார்.

கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது லாரி ஒன்று மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சவுந்தரராஜன் பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இந்த விபத்தில் சவுந்தரராஜன் தனது வலது கையை இழந்தார். இதனால் அவரால் தனது போட்டோகிராபர் பணிக்கு செல்ல முடியவில்லை.

இதையடுத்து சவுந்தரராஜன் விபத்தால் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் எனவே ஒரு கோடி ரூபாய் நஷ்டஈட்டை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என்று மோட்டார் விபத்து தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு சம்பந்தமாக பதில் அளித்த இன்சூரன்ஸ் நிறுவனம் இந்த விபத்து லாரி டிரைவரால் ஏற்படவில்லை. மோட்டார் சைக்கிளில் சென்ற சவுந்தரராஜனின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, நஷ்டஈடு வழங்க முடியாது என்று தெரிவித்தது.

இவ்வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி உமா கேஸ்வரி தீர்ப்பளித்தார். அதில், போலீஸ் எப்.ஐ.ஆர். மற்றும் மற்ற ஆவணங்களில் விபத்துக்கு லாரி தான் காரணம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

எனவே நஷ்டஈட்டை பெற சவுந்தரராஜனுக்கு தகுதி இருக்கிறது. அவர் கையை இழந்துள்ளதால், வருமானம் இன்றியும், திருமண வாய்ப்பையும் இழக்கும் நிலையில் உள்ளார்.

எனவே அவருக்கு ரூ.52 லட்சத்து 46 ஆயிரம் நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
Tags:    

Similar News