செய்திகள்
நெல்லை -தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக அவ்வப்போது மேகக்கூட்டங்கள் ஒன்று கூடி லேசாக மழை பெய்து வருகிறது.
நெல்லை:
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அவ்வப்போது மேகக்கூட்டங்கள் ஒன்று கூடி லேசாக மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு பருவமழை காலம் முடிவடைந்த நிலையில் வடகிழக்கு பருவமழையின் தொடக்கமாக இந்த சாரல் மழை பெய்த தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் இரவும்,நேற்று பகலிலும் நெல்லை மற்றும் தூத்துக்குடியின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதேபோல் தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று பரவலாக மழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையினால் பாபநாசம், சேர்வலாறு, கருப்பாநதி, அடவிநயினார் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 105.75 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 233.56 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 354.75 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 118.11 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 43 அடியாகவும் உள்ளது.
அதிகபட்சமாக நெல்லை மாவட்டத்தில் ஆய்க்குடி பகுதியில் 26.10 மில்லி மீட்டர் மழையும், தூத்துக்குடியில் 10 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
மணிமுத்தாறு - 3.2
குண்டாறு -9
அடவிநயினார் -10
அம்பாசமுத்திரம் -4
ராதாபுரம் -3
சங்கரன்கோவில் -15
செங்கோட்டை -5
சிவகிரி -15
தென்காசி -13
நெல்லை -3
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
திருச்செந்தூர் -4
காடல்குடி -8
வைப்பார் -3
கயத்தார் -2
சூரங்குடி - 5
ஓட்டப்பிடாரம் -2
கடம்பூர் -3
சாத்தான்குளம் -3.4
தூத்துக்குடி -10