செய்திகள்
செங்கோட்டை அருகே காவலாளி மர்ம மரணம்
செங்கோட்டை அருகே காவலாளி மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே உள்ள புளியரை செட்டியார் தெருவை சேர்ந்தவர் ராஜன் (வயது53). இவர் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் உள்ள மேக்கரையில் தனியாருக்கு சொந்தமான அருவி பகுதியில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.
சம்பவத்தன்று அதன் உரிமையாளர் அருவி பகுதிக்கு சென்று பார்த்த போது காவலாளி ராஜன் அசைவற்ற நிலையில் கிடந்தார். இதையடுத்து அருவியின் உரிமையாளர் உடனடியாக ராஜன் மகன் மகேஷ்வரனுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவரது உறவினர்கள் அங்கு விரைந்து வந்து பார்த்த போது காவலாளி ராஜன் மர்மமான முறையில் இறந்து கிடப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து மகேஷ்வரன் அளித்த புகாரின் பேரில் அச்சன்புதூர் சப்-இன்பெக்டர் பானுமதி சம்பவ இடத்திற்கு வந்து ராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.