அம்மாபேட்டை அருகே ரெயில்வே தண்டவாள இரும்பு கிளிப்புகளை திருடிய வாலிபர் கைது
தஞ்சாவூர்:
தஞ்சை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் உத்தரவுப்படி சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் தலைமையில் போலீசார் தஞ்சை ரெயில்வே எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து சென்றனர்.
அம்மாபேட்டை- நீடாமங்கலத்துக்கு இடைப்பட்ட ரெயில்வே தண்டவாளத்தில் ரோந்து சென்றபோது அங்கு ஒரு வாலிபர் சாக்குபையுடன் நடந்து வந்து கொண்டிருந்ததை பார்த்தனர். போலீசார் வருவதை பார்த்த அந்த வாலிபர் சாக்குபையோடு தப்பி ஓட முயன்றார். ஆனால் அதற்குள் அந்த வாலிபரை சுற்றி வளைத்து போலீசார் மடக்கி பிடித்தனர்.
இதையடுத்து சாக்குபையை சோதனை செய்ததில் அவர் தண்டவாளத்தை இணைக்க பயன்படும் 15 பேன்ட்ரோல் கிளிப்புகளை திருடி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் அவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வாஞ்சூரை சேர்ந்த தர்மராஜ் (வயது 28) என்பது தெரியவந்தது. இதையடுத்து தண்டவாள கிளிப்புகளை திருடிய தர்மராஜை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து இரும்பு கிளிப்புகள் கைப்பற்றப்பட்டது.