செய்திகள்
நகை திருட்டு

வெள்ளகோவில் அருகே சத்துணவு பணியாளரிடம் நகை பறிப்பு

Published On 2019-10-12 09:55 GMT   |   Update On 2019-10-12 09:55 GMT
வெள்ளகோவில் அருகே சத்துணவு பணியாளரிடம் 3 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளகோவில்:

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள புதுக்காடு என்ற இடத்தில் வசித்து வருபவர் கருணாகரன்.

இவரது மனைவி நல்லமுத்து(வயது 55). சத்துணவு பணியாளர். சம்பவத்தன்று நல்லமுத்து தனது வீட்டின் அருகே நின்று செல்போனில் பேசி கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் நல்லமுத்து கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை பறித்து சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த நல்லமுத்து சத்தம் போட்டார். ஆனால் அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

இதேபோல் வெள்ளகோவில் எல்.கே.சி.நகரை சேர்ந்தவர் சோலை சண்முகம். இவரது மனைவி கமலம்(65). இவர் சம்பவத்தன்று வீட்டின் அருகே உள்ள கோவிலுக்கு நடந்து சென்றார். அப்போது அதே வழியாக வந்த இதே மர்ம நபர்கள் அவரிடம் முகவரி கேட்பது போல் நடித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க செயினை பறிக்க முயன்றனர். ஆனால் கமலம் செயினை கெட்டியாக பிடித்து கொண்டு சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அவர்கள் வருவதை பார்த்ததும் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இந்த இரு சம்பவங்கள் குறித்தும் வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளகோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அடிக்கடி நடந்து செல்பவர்களிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர்.
Tags:    

Similar News