திண்டுக்கல் அருகே இரு வேறு இடங்களில் 8 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் திருட்டு
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள நாடாண்மைகாரன் பட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை, ரூ.10 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றனர்.
மாலையில் வீடு திரும்பிய கோவிந்தராஜ் நகை, பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதே போல வடமதுரை அருகே உள்ள அக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெபஸ்டின் (வயது 45). களத்து வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டை பூட்டி வெளியே சென்றிருந்த சமயம் மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து 3 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரத்தை திருடிச் சென்றனர். இது குறித்து வடமதுரை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து நடந்த திருட்டு சம்பவங்களால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.