செய்திகள்
சீன அதிபர் வருகையையொட்டி 34 பொறுப்பு அதிகாரிகள் நியமனம் - தமிழக அரசு
சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையை முன்னிட்டு 34 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை:
சீன அதிபர் ஜி ஜின்பிங் அரசுமுறை பயணமாக நாளை மறுநாள் (11-ம் தேதி) சென்னை வருகிறார். பிரதமர் மோடியும் அன்று சென்னை வருகிறார்.
சென்னை விமான நிலையத்தில் சீன அதிபருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் வரும் 11-ம் தேதி மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அப்போது, முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதோடு, மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா தலங்களையும் இருவரும் பார்வையிட உள்ளனர்.
இதை முன்னிட்டு, மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொல்லியல்துறை அறிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ஐந்துரதம், கடற்கரை கோயில், அர்ஜூனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட இடங்கள் மூடப்பட்டுள்ளன.
இதற்கிடையே, மாமல்லபுரம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், சீன அதிபர் வருகையையொட்டி 34 பொறுப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
பிரதமர் மோடியும், சீன அதிபரும் மாமல்லபுரம் வர இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், பாதுகாப்பு மற்றும் விழா ஏற்பாடுகளை மேற்கொள்ள 34 சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக்காக 34 சிறப்பு அதிகாரிகளும், மேற்பார்வையிட 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.