தடாகம் பகுதியில் கஞ்சா விற்ற பெண் கைது
கவுண்டம்பாளையம்:
கோவை கணுவாய் அடுத்துள்ள சின்னதடாகம் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக தடாகம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து அந்த பகுதிகளில் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது சின்னதடாகம் வடக்கு வீதியில் கஞ்சா விற்கப்படுவதாக அந்த வழியாக வந்தவர்கள் கூறி செல்ல உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அங்கு சுப்ரமணி என்பவரின் மனைவி சாந்தாமணி (45) என்பவர் கஞ்சா வைத்திருக்க அவரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். சாந்தாமணியிடம் இருந்து ஒரு கிலோ 400 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து வழக்கு பதிவு செய்து சாந்தாமணியை சிறையில் அடைத்தனர். ஏற்கனவே கடந்த 10 நாட்களில் மட்டும் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் மற்றும் 6 அடிக்கு மேல் கஞ்சா மரம் ஒன்றை யாருக்கும் தெரியாமல் வளர்த்து வந்த ஒருவர் என 4 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.