செய்திகள்
கொள்ளை

திருக்கனூர் அருகே 2 வீடுகளில் நகை- பணம் கொள்ளை

Published On 2019-10-05 10:06 GMT   |   Update On 2019-10-05 10:06 GMT
திருக்கனூர் அருகே 2 வீடுகளில் புகுந்து மர்ம நபர்கள் நகை - பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

திருக்கனூர்:

திருக்கனூர் அருகே மண்ணாடிப்பட்டு மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் சுந்தர்ராஜ் (வயது 65). இவர், லிங்கா ரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

நேற்று இரவு இவர் தனது தாய் முத்துலட்சுமி, மகள் சுதா ஆகியோருடன் வீட்டில் முன்பக்க கதவை பூட்டி விட்டு தூங்கிக் கொண்டு இருந்தார்.

நள்ளிரவு மர்ம நபர்கள் இவரது வீட்டின் முன்பக்க கதவை நெம்பி திறந்து உள்ளே புகுந்தனர். பின்னர் சாமி படத்தின் அருகில் வைத்திருந்த பீரோ சாவியை எடுத்த அவர்கள் பீரோவை திறந்து அதில் வைத்திருந்த 4¼ பவுன் நகை மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.

பின்னர் அதே பகுதியை சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி பச்சையப்பன் (50) என்பவர் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் அங்கு கட்டிலில் வைத்திருந்த ¼ பவுன் மோதிரத்தை கொள்ளையடித்தனர்.

அப்போது பச்சையப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் திடுக்கிட்டு எழுந்து திருடன்... திருடன்... என்று அலறல் சத்தம் போட்டனர். உடனே கொள்ளையர்கள் நகையுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து சுந்தர்ராஜ் மற்றும் பச்சையப்பன் ஆகிய இருவரும் திருக்கனூர் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News