செய்திகள்
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு இரண்டாவது நீராவி ஜெனரேட்டரை அனுப்பியது ரஷியா
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் யூனிட்- 4 கிற்கு இரண்டாவது நீராவி ஜெனரேட்டரை அனுப்பி வைத்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
சென்னை: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின்நிலையம் உள்ளது. ரஷ்யாவின் ரோசாடம் அணுசக்தி கழகத்தின் கூட்டு முயற்சியுடன் கூடங்குளத்தில் அணுமின்நிலையம் கட்டப்பட்டது. 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. சுமார் ரூ.39 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அணுஉலைகள் அமைக்கப்படுகின்றன. இந்த பணிகள் 2024ம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் , கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் யூனிட் 4 கிற்கு இரண்டாவது நீராவி ஜெனரேட்டரை ரஷ்யா அனுப்பியுள்ளது.
இதுகுறித்து ரஷிய அதிகாரிகள் கூறுகையில், 15 மீட்டர் நீளமும் 340 டன் எடையும் உடைய ஜெனரேட்டர் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. செயின் பீட்டர்ஸ்பர்க் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுள்ள கப்பல், பால்டிக் மற்றும் மத்திய தரைக்கடல் கடல்கள், சூயஸ் கால்வாய், செங்கடல் ஆகியவற்றின் வழியாக பயணம் செய்து இந்தியப் பெருங்கடலை அடையும். மொத்தம் 21,000 கிலோ மீட்டர்களை கடந்து கூடங்குளம் அணுமின் நிலையத்தை வந்தடையும்.
அணு உலையில் இருந்து வரும் வெப்ப ஆற்றல் நீராவி ஜெனரேட்டர் மூலம் நீராவியாக மாற்றப்படுகிறது. நீராவியின் இயந்திர ஆற்றல் டர்பைன் ஜெனரேட்டருக்கு அளிக்கப்பட்டு மின் ஆற்றலாக மாற்றப்படும், என தெரிவித்தனர்.