செய்திகள்
களியக்காவிளை அருகே ராஜஸ்தான் இளம்பெண்ணை கடத்தி கற்பழிக்க முயன்ற வாலிபர்
களியக்காவிளை அருகே நெடுஞ்சாலையில் பொம்மைகள் விற்கும் ராஜஸ்தான் இளம்பெண்ணை கடத்தி கற்பழிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருவனந்தபுரம்:
களியக்காவிளையை அடுத்த பாறசாலை உதியன் குளக்கரை பகுதியிலும் ராஜஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பொம்மை விற்பனை செய்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ரஞ்சன் (வயது 25). இவர், தினமும் மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக செல்வார். அப்போது பொம்மை விற்கும் பெண்ணை நோட்டமிட்டார்.
அந்த பெண் இரவில் சாலையோரம் கூடாரம் அமைத்து தங்கி இருப்பதை கண்டார். சம்பவத்தன்று அந்த பெண், இரவில் தனியாக தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ரஞ்சன் நைசாக பெண் அருகே சென்று படுத்துக் கொண்டார். பெண், அசந்து தூங்கியபோது அவரது வாயை பொத்தி தூக்கிச் சென்றார்.
இருட்டான பகுதிக்கு அந்த பெண்ணை கடத்திச் சென்ற வாலிபர் ரஞ்சன் அங்கு அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பெண் அலறினார். ரஞ்சனின் கையையும் கடித்தார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் ரஞ்சனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.ரஞ்சனை 14 நாள் காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து ரஞ்சன் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.