செய்திகள்
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு - விஜயகாந்த்
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு தேமுதிக ஆதரவு தெரிவித்துள்ளது.
சென்னை:
நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. சார்பில் விழுப்புரத்தைச் சேர்ந்த புகழேந்தியும், நாங்குநேரியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரனும் போட்டியிடுகின்றனர்.
அ.தி.மு.க. சார்பில் விக்கிரவாண்டியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட காணை ஒன்றிய அதிமுக செயலாளராக உள்ள முத்தமிழ்ச்செல்வனும், நாங்குநேரியில் நெல்லை புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளராக உள்ள ரெட்டியார்பட்டி வெ. நாராயணனும் போட்டியிடுகின்றனர் என எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தனர்.
இதற்கிடையே, நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்தை அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி , திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
இந்நிலையில், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு தே.மு.தி.க. ஆதரவு
தெரிவித்துள்ளதாக அக்கட்சி இன்று அறிவித்துள்ளது.