செய்திகள்
வசந்தகுமார் எம்பி

திமுக ஆதரவுடன் நாங்குநேரியில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் - வசந்தகுமார் எம்பி

Published On 2019-09-28 08:30 GMT   |   Update On 2019-09-28 11:32 GMT
திமுக ஆதரவுடன் நாங்குநேரியில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் என்று வசந்தகுமார் எம்பி கூறியுள்ளார்.

சென்னை:

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் அறிவிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் இருந்து அவர் இன்று சென்னை வந்தார்.

இன்று மாலை தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.

நாங்குநேரி தொகுதி நிலவரம் எப்படி இருக்கும் என்பது பற்றி அந்த தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும் தற்போதைய நாகர்கோவில் எம்.பி.யுமான எச்.வசந்தகுமார் கூறியதாவது:-

கட்சி மேலிடம் ரூபி மனோகரனை வேட்பாளராக அறிவித்திருக்கிறது. அந்தத் தொகுதியில் நான் எட்டு வருடம் எம்.எல்.ஏ.வாக இருந்தவன். அந்த தொகுதியின் நிலவரமும், மக்கள் மனநிலையும் எனக்கு தெரியும்.

உள்ளூர்-வெளியூர் என்று திசை திருப்புவதற்காக சொல்வதெல்லாம் மக்கள் மத்தியில் எடுபடாது. நானும் வெளியூர்காரன் தானே. அந்தத் தொகுதியில் நான் செய்திருக்கும் பணிகளும் விவசாயிகளுக்காக செய்த பணிகளும் மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது மாதம்தோறும் வாங்கிய சம்பளத்தை அந்தத் தொகுதியில் உள்ள பள்ளிக்குழந்தைகளின் படிப்பு செலவுக்காக கொடுத்து வந்தேன். அதே போல் தற்போது போட்டியிடும் மனோகரனும் வெற்றி பெற்றால் சம்பளத்தை குழந்தைகளுக்கு செலவிட உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

நான் எப்படி அந்தத் தொகுதியில் சுற்றி சுற்றி வந்து மக்கள் பணிகளை செய்தேனோ அதே போல் ரூபி மனோகரனும் செய்வார். பக்கத்து தொகுதியில் தான் நானும் எம்.பி.யாக இருக்கிறேன்.

ரூபி மனோகரன் வெற்றி பெற்றதும் அவரோடு நானும் வாரம் ஒரு முறை நாங்குநேரி தொகுதிக்குள் சுற்றி வந்து மக்கள் பணி செய்வோம். நாங்குநேரி தொகுதியில் தி.மு.க. கூட்டணி ஆதரவுடன் எங்கள் வெற்றி 100 சதவீதம் உறுதியாகி இருக்கிறது. திசை திருப்பும் பிரச்சாரங்கள் எவ்வளவு செய்தாலும் மக்கள் முன் திசைமாறிப் போய்விடும்.

இவ்வாறு அவர் கூறினார்

Tags:    

Similar News