செய்திகள்
மழை

குமரியில் மழை நீடிப்பு - பேச்சிப்பாறை அணை மூடல்

Published On 2019-09-27 08:38 GMT   |   Update On 2019-09-27 08:38 GMT
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையை அடுத்து பேச்சிப்பாறை அணை மூடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணை மீண்டும் பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

அணை பகுதிகளில் நேற்றும் பரவலாக மழை பெய்து வருகிறது. மயிலாடி, முள்ளங்கினாவிளை, நாகர்கோவில், பூதப்பாண்டி பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. மயிலாடியில் அதிகபட்சமாக 6.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையை அடுத்து பேச்சிப்பாறை அணை மூடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணை மீண்டும் பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.

48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 25.60 அடியாக உள்ளது. அணைக்கு 563 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 66.35 அடியாக உள்ளது. அணைக்கு 594 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 100 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 12.79 அடியாகவும், சிற்றாறு-2 அணையின் நீர் மட்டம் 12.89 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 48.56 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.50 அடியாக உள்ளது.

Tags:    

Similar News