செய்திகள்
இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டு விஜயகாந்துடன் அமைச்சர்கள் சந்திப்பு
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை அமைச்சர்கள் சந்தித்து பேசியுள்ளனர்.
சென்னை:
நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் விழுப்புரத்தைச் சேர்ந்த புகழேந்தி போட்டியிடுவார் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
மேலும், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று அறிவித்தனர்.
அதன்படி, விக்கிரவாண்டியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட காணை ஒன்றிய அதிமுக செயலாளராக உள்ள முத்தமிழ்ச்செல்வனும், நாங்குநேரியில் நெல்லை புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளராக உள்ள ரெட்டியார்பட்டி வெ. நாராயணனும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி , திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் இன்று இரவு சந்தித்துப் பேசினர்.