செய்திகள்
பாக்கமுடையான்பேட்டில் பள்ளி மாணவி தூக்குபோட்டு தற்கொலை
பாக்கமுடையான் பேட்டில் பள்ளி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை பாக்கமுடையான் பேட் ஆனந்தபுரம் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவரது கணவர் கோவிந்தன். இவர் 10 வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்டார். இவருக்கு சாருலதா (வயது 16) என்ற மகளும், முகேஷ் (15) என்ற மகனும் உள்ளனர். சாருலதா லாஸ்பேட்டையில் உள்ள பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை திடீரென சாருலதா வீட்டின் பூஜை அறையில் உள்ள மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை கண்ட அவரது தாய் கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் உதவியுடன் தூக்கில் இருந்து மீட்டு அவரை கோரிமேடு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சாருலாவை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சாருலதாவின் பாட்டி கஸ்தூரி தன்வந்திரி கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவருடைய தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.