செய்திகள்
5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு- சட்டக்கல்லூரி மாணவர்கள் மறியல்
5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை சட்டக்கல்லூரி மாணவர்கள் புதிய பஸ் நிலையம் அருகே இன்று திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் புதுவை சட்டக்கல்லூரி மாணவர்கள் புதிய பஸ் நிலையம் அருகே இன்று திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய கல்வி கொள்கையை வாபஸ் பெற வேண்டும். தமிழகம் மற்றும் புதுவையில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை அமல் படுத்தக்கூடாது. புதுவை மாநிலத்துக்கு தனி கல்வி வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
100-க்கும்மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் சுமார் அரை மணி நேரம் புதுவை- கடலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பொதுத்தேர்வை ரத்து செய்யவில்லை என்றால் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவோம் என மாணவர்கள் தெரிவித்தனர்.