செய்திகள்
முற்றுகை

பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட தாய்-குழந்தை பலி: அரசு ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகை

Published On 2019-09-23 13:05 GMT   |   Update On 2019-09-23 13:05 GMT
புதுவை அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தாய்-குழந்தை பரிதாபமாக இறந்து போனார்கள்.

புதுச்சேரி:

கடலூர் உள்கோரப்பட்டு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குணா. மருந்து விற்பனை பிரதிநிதி. இவரது மனைவி பாரதி (வயது26). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரைநேற்று காலை பிரசவத்துக்காக புதுவை ராஜீவ்காந்தி அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். பாரதிக்கு ரத்த அழுத்தம் இருந்ததால் அதற்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து விட்டு மாலையில் பாரதியை பிரசவ வார்டுக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் பாரதிக்கு ஆபரே‌ஷன் மூலம் குழந்தையை எடுத்தபோது குழந்தை இறந்து போனது. இதைத்தொடர்ந்து பாரதிக்கு உடல் நிலை மோசமானதால் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பாரதியும் பரிதாபமாக இறந்து போனார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் குணாவின் உறவினர்கள் 20-க்கும் மேற்பட்டோர் மகப்பேறு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு தாய்-குழந்தை பலிக்கு காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி போராட்டம் நடத்தினர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அமைச்சர் கந்தசாமி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி குணாவின் உறவினர்களை சமாதானப்படுத்தினர். இதனை ஏற்று உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

பின்னர் இதுகுறித்து குணா ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மனைவி மற்றும் குழந்தை சாவுக்கான டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News