செய்திகள்
குடிநீர் தட்டுப்பாடு- அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் மறியல்
ஜோலார்பேட்டையில் குடிநீர் விநியோகிக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகிக்கப்பட வில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து பஞ்சாயத்து செயலாளர் பிரபாகரனிடம் பலமுறை புகார் அளித்தும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அச்சமங்கலம் கிராம மக்கள் இன்று காலை நாட்றம்பள்ளி, திருப்பத்தூர் சாலையில் காலி குடங்களை வைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நாட்டறம் பள்ளியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்தனர். ஆனாலும் சம்பவ இடத்திற்கு அதிகாரிகளோ போலீசாரோ யாரும் வராததால் சிறிது நேரம் போராட்டம் நடத்தி விட்டு கலைந்து சென்றனர்.
இதுகுறித்து நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் ருத்ரன் கூறுகையில்:-
அச்சமங்கலத்திற்கு சீரான முறையில் குடிநீர் வழங்கி வருகிறோம். ஆனால் சிலர் மின் மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சுவதால் தண்ணீர் சப்ளை செய்ய முடியவில்லை. இனிமேல் குடிநீர் உறிஞ்சும் மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டு முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.