செய்திகள்
கைது

ஆரோவில் பகுதியில் சுற்றுலா பயணிகளிடம் கொள்ளையடிக்க திட்டமிட்ட புதுவை ரவுடிகள் கைது

Published On 2019-09-20 08:53 GMT   |   Update On 2019-09-20 08:53 GMT
ஆரோவில் பகுதியில் சுற்றுலா பயணிகளிடம் கொள்ளையடிக்க திட்டமிட்ட புதுவை ரவுடிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேதராப்பட்டு:

ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் நேற்று இரவு ஆரோவில் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது அப்பகுதியில் இருளில் பதுங்கி இருந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் பயந்து ஓடினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்தனர். அப்போது அவர்கள் கத்தி, வீச்சரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தனர்.

இதையடுத்து அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் புதுவை கருவடிக்குப்பத்தை சேர்ந்த புஷ்பராஜ் (26) மற்றும் நாவற்குளத்தை சேர்ந்த வெற்றி (24) என்பதும், ரவுடிகளான இவர்கள் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் உள்ளது தெரிய வந்தது.

மேலும் விசாரணையில் கடந்த ஆண்டு கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் பெட்ரோல் பங்க் ஊழியரை அரிவாளால் வெட்டி பணத்தை பறித்து சென்ற சம்பவத்தில் இவர்கள் 2 பேரும் முக்கிய குற்றவாளிகள் என்பதும் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து அவர்களிடம் ஆரோவில் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தது குறித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர்.

ஆரோவில் பகுதிக்கு சுற்றுலா வரும் வெளி நாட்டு பயணிகளிடம் கொள்ளையடிக்க பதுங்கி இருந்ததாகவும், பின்னர் கொள்ளையடித்த நகை- பணத்துடன் ஆந்திராவுக்கு தப்பி செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து புஷ்பராஜ், வெற்றி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் கொள்ளையடிக்கும் சதித் திட்டத்தை முறியடித்து குற்றவாளிகளை கைது செய்த ஆரோவில் போலீசாரை விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டினார்.

Tags:    

Similar News