செய்திகள்
கருங்கல் அருகே தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது
கருங்கல் அருகே தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
கருங்கல் காக்கவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜன் (வயது 40). தொழிலாளி.
இவர் நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக காட்டுக்கடை சந்திப்பில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் அவரிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். ஆனால் ராஜன் தன்னிடம் பணம் எதுவும் இல்லை என கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.2,730-ஐ பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து கருங்கல் போலீசில் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் ரெகு பாலாஜி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ராஜனிடம் கத்திய காட்டி மிரட்டி பணம் பறித்தது கருங்கல் பகுதியை சேர்ந்த பெஞ்சமின் (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.