செய்திகள்
கோவிலில் மழை தண்ணீர் தேங்கி கிடப்பதை படத்தில் காணலாம்.

தஞ்சை,நாகை, திருவாரூரில் இடியுடன் கனமழை

Published On 2019-09-20 07:08 GMT   |   Update On 2019-09-20 07:08 GMT
தஞ்சை, நாகை, திருவாரூரில் இடியுடன் கனமழை காரணமாக பயிர்கள் தண்ணீரில் மூழ்குவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர:

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடந்த ஒருவாரமாக மழை பெய்து வருகிறது.

தஞ்சையில் நேற்று மாலை முதல் திடீரென கனமழை பெய்ய தொடங்கியது. அவ்வப்போது இடியுடன் பலத்த காற்றும் வீசியது.

இதனால் தஞ்சை நகரில் பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது. மேலும் இடைவிடாமல் மழை தூறிக்கொண்டே இருந்தது. கனமழை காரணமாக ரோட்டோரங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.

இதேபோல் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, திருவிடைமருதூர், பேராவூரணி, திருவையாறு, பூதலூர் ஆகிய இடங்களிலும் மழை பெய்தது.

தஞ்சையில் இடைவிடாமல் பெய்த மழையால் தஞ்சை மேலவீதியில் உள்ள மூலை அனுமார் கோவிலின் உள்ளே மழை தண்ணீர் புகுந்தது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அவதிப்பட்டனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் குறுவை அறுவடைக்கு தயாரான பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வருகின்றன. இதனால் தஞ்சை மாவட்ட விவசாயிகள் வேதனையில் இருந்து வருகின்றனர்.

நாகை மாவட்டத்தில் தொடர்ந்து 6 நாட்களாக மழை பெய்து வருகிறது. நாகை, திருப்பூண்டி, மயிலாடுதுறை, சீர்காழி, மணல்மேடு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

வேதாரண்யம் பகுதியில் கோடியக்கரை, ஆறுக்காட்டுத் துறை, புஷ்பவனம், பெரிய குத்தகை, வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி உள்ளிட்ட கிராமங்களில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் நேற்று மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் வெயில் அடித்தது. இதையடுத்து மீனவர்கள் இன்று தங்களது படகுகளில் மீன் பிடிக்க கடலுக்கு புறப்பட்டு சென்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முத்துப்பேட்டை, மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்தது.

Tags:    

Similar News