ஊத்துக்கோட்டை அருகே வாய்க்காலில் ஆண் பிணம் - கொலை செய்யப்பட்டாரா?
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள செஞ்சி அகரம் கிராமத்தில் பொதுப் பணித் துறைக்கு சொந்தமான வாய்க்கால் உள்ளது. இங்கு சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணமாக கிடந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் முருகய்யன் மற்றும் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சப்- இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்தவர் சிகப்பு நிற டீ சர்ட், நீல நிறலுங்கி அணிந்துள்ளார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.
அவரை யாரேனும் அடித்து கொலை செய்து பிணத்தை வீசி சென்றனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள லச்சிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சிவமணி (55). கூலித் தொழிலாளி. உடல் நிலை பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மன வேதனை அடைந்த சிவமணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.