செய்திகள்
முதலியார்பேட்டையில் கூரையில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
முதலியார்பேட்டையில் கூரையில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுச்சேரி:
மத்தியபிரதேசத்தை சேர்ந்தவர் சலீம்கான் (வயது 58). இவர், கடந்த 7 ஆண்டுகளாக புதுவை முதலியார்பேட்டை 100 அடி சாலையில் உள்ள ஒரு மார்பில்ஸ் கடையில் தங்கி வேலை செய்து வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு சலீம்கானை பார்ப்பதற்காக அவரது மகன் ஜாகீர்கான் (19) புதுவை வந்திருந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று சலீம்கான் தங்கி இருந்த சிமெண்டு ஷீட் கூரையில் மழைநீர் தேங்கி இருந்தது. இதனை சலீம்கான் அகற்றிக் கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு உதவி செய்வதற்காக ஜாகீர்கான் கூரையில் ஏறினார். அப்போது எதிர்பாராத விதமாக கூரையில் இருந்து ஜாகீர்கான் தவறி விழுந்தார். இதில், படுகாயம் அடைந்த ஜாகீர்கானை அவரது தந்தை சலீம்கான் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜாகீர்கான் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.