செய்திகள்
பாடாலூர் அருகே நடுரோட்டில் வாலிபர் கொலை
பாடாலூரில் நடுரோட்டில் நிர்வாண நிலையில் ஒருவர் கத்தியால் வெட்டபட்டு பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை திருவளர்குறிச்சி பிரிவு சாலை உள்ளது. இந்த பிரிவு சாலை அருகே இன்று காலை பொதுமக்கள் நடந்து சென்றனர். அப்போது சாலையின் ஓரத்தில் சுமார் 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் நிர்வாண நிலையில் கத்தியால் கழுத்து மற்றும் கை வெட்டபட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது குறித்து பாடாலூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிணமாக கிடந்தவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசுமருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவரை யாரும் காரில் கடத்தி வந்து இங்கு வைத்து கத்தியால் வெட்டி கொலை செய்தார்களா? அல்லது வேறு எங்கும் கொலை செய்து விட்டு உடலை இங்கு வீசி சென்றார்களா? என்று பல கோணங்களில் விசாரித்து வருகிறார்கள். பெரம்பலூர் டி.எஸ்.பி. ராமமூர்த்தி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாயும் வர வழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த ஆண் நிர்வாண நிலையில் கிடந்தார். அதனால் கள்ளக்காதல் பிரச்சினையில் அவரை யாரும் கொலை செய்தார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.