செய்திகள்
சுவர் இடிந்து பலியான செரீனா பானு

பலத்த மழை - மண்ணடியில் வீட்டு சுவர் இடிந்து பெண் உயிரிழப்பு

Published On 2019-09-19 06:24 GMT   |   Update On 2019-09-19 06:24 GMT
சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் பெய்த கனமழை காரணமாக மண்ணடியில் வீட்டு சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழந்தார்.
ராயபுரம்:

சென்னை மற்றும் புறநகரில் நேற்று நள்ளிரவு தொடங்கிய மழை கனமழையாக நீடித்து வருகிறது.

மண்ணடி, அய்யப்பா செட்டித்தெரு, நவாஸ்கான் தெருவில் வசித்து வந்தவர் செரீனா பானு என்கிற பத்மினி (வயது 42) இவரது கணவர் கடந்த 20 ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இவர்களது மகன் லெனின்குமார் அருகில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறார். மகள் நஸ்லின் பாத்திமா தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். செரீனா பானு தனது குடும்பத்தை கஷ்டப்பட்டு நடத்தி வந்தார்.

நேற்று இரவு 3 பேரும் வீட்டில் தூங்கினர். லெனின் குமாரும், நஸ்லின் பாத்திமாவும் கட்டிலில் படுத்துக்கொண்டனர். செரீனாபானு மட்டும் தரையில் படுத்து இருந்தார்.

இந்த நிலையில் நள்ளிரவு முதல் மண்ணடி பகுதியில் பலத்த மழை கொட்டிக் கொண்டு இருந்தது. அதிகாலை முதல் இடியுடன் கனமழை பெய்தது.

இதில் வீட்டின் மேற்கூரையும், சுவரும் இடிந்து பலத்த சத்தத்துடன் செரீனா பானு மீது விழுந்தது. தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

அவரது மகளும், மகனும் தனியாக கட்டிலில் தூங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்கள் மீது கட்டிட இடிபாடுகளுடன் விழவில்லை.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். தகவல் அறிந்ததும் எஸ்பிளனேடு போலீசார் விரைந்து வந்த செரீனா பானுவின் உடலை மீட்டு பரிசோதனைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

செரீனா பானு தங்கி இருந்த வீடு ஒரு கோவிலுக்கு சொந்தமான இடம் என்று தெரிகிறது. அவர் கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக இங்கு வசித்து வந்து உள்ளார். வீடு ஏற்கனவே சேதம் அடைந்து இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மழை தொடங்கிய சிறிது நேரத்திலேயே சுவர் இடிந்து செரீனா பானு பலியாகி விட்டார். ஏற்கனவே தந்தையை இழந்து இருந்த நஸ்லினும், லெனின் குமாரும் தற்போது தாயையும் இழந்து தவிப்பில் உள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News