செய்திகள்
உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்ற போது எடுத்த படம்.

நாமக்கல்லில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2019-09-17 17:36 GMT   |   Update On 2019-09-17 17:36 GMT
நாமக்கல்லில் நேற்று நடந்த உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ஆசியா மரியம் தொடங்கி வைத்தார்.
நாமக்கல்: 

நாமக்கல் மாவட்ட தேசிய நலவாழ்வு திட்டம், மருத்துவம், மாவட்ட மனநல திட்டம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் சார்பில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி, உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் மோகனூர் சாலை, பி.எஸ்.என்.எல். அலுவலகம் வழியாக திருச்சி சாலை சென்று நெடுஞ்சாலைத்துறை பயணியர் மாளிகையில் நிறைவடைந்தது.

இந்த ஊர்வலத்தில் தனியார் கல்லூரிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு தற்கொலை எண்ணங்களை ஒழிப்போம், தற்கொலையை தடுப்போம் மனித இனத்தை காப்போம் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.

முன்னதாக உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு உறுதிமொழியை கலெக்டர் வாசிக்க, அனைவரும் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். இதில் இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) சாந்தி, மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜ்மோகன், இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் ரங்கநாதன், மாவட்ட மனநல திட்ட அலுவலர் டாக்டர் குணமணி, மனநல மருத்துவர் ஜெயச்சந்திரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News