செய்திகள்
பாபநாசம் அருகே டிரான்ஸ்பார்மரில் மோதி வயலில் கவிழ்ந்த லாரி- டிரைவர் உயிர் தப்பினார்
பாபநாசம் அருகே டிரான்ஸ்பார்மரில் லாரி மோதி வயலில் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் காயத்துடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாபநாசம்:
கரூரில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு காரைக்கால் நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை நாகையை சேர்ந்த மாதவன் (வயது 40) ஓட்டிச் சென்றார். இந்த லாரி தஞ்சை மாவட்டம், பாபநாசத்தை அடுத்த சாலியமங்கலம் வழியாக சென்றபோது எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் உள்ள வயலில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் மாதவன் காயங்களுடன் உயிர் தப்பினார்.
அந்த லாரி ஒரு டிரான்ஸ்பார்மர், 4 மின்கம்பங்கள் மீதும் மோதி கீழே விழுந்துள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் மின்சாரம் தடைபட்டது. மேலும், பம்பு செட்டு மூலம் விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு டிரான்ஸ்பார்மர் சாய்ந்ததினால், மின் விநியோகம் தடைபட்டது. அந்த பகுதியில் குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு உடனடியாக வேறு டிரான்ஸ்பர்மர் மூலம் மின் விநியோகம் செய்யப்பட்டது. இந்த விபத்தின் காரணமாக மின்சார வாரியத்திற்கு ரூ.1 1/2 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து திருக்கருக்காவூர் மின்சாரவாரியத்தின் உதவிபொறியாளர் மணிவண்ணன் லாரி ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் மீது தக்க நடவடிக்கை எடுத்து இழப்பீடு தொகையை வசூல் செய்து தருமாறு வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து வலங்கைமான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.