செய்திகள்
அம்மா உடற்பயிற்சிக்கூடம்

ரூ.6 கோடியில் பூங்காவுடன் கூடிய அம்மா உடற்பயிற்சிக்கூடம்

Published On 2019-09-16 18:11 GMT   |   Update On 2019-09-16 18:11 GMT
ரூ.6 கோடி மதிப்பீட்டில் 20 இடங்களில் பூங்காவுடன் கூடிய அம்மா உடற்பயிற்சிக்கூடம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கரூர்:

கரூரில் தற்போது பெருகி வரும் நகரமயமாதலால் குடியிருப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாகரிக வளர்ச்சியின் உச்சத்தில் இருப்பதால், டெக்ஸ்டைல், கொசுவலை, பஸ்பாடி என பல்வேறு தொழில் நிறுவனங்களில் பலரும் வேலை பார்த்து வருகின்றனர். விவசாய பணிகளும் பரவலாக நடக்கிறது. கரூர் மக்கள் தங்களது உடல் நலத்தை பேணும் வகையில் நடைபயிற்சி மேற்கொள்வது உள்ளிட்டவற்றுக்காக கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானம், தாந்தோன்றிமலை மாவட்ட விளையாட்டு மைதானம் ஆகியவற்றை பிரதானமாக பயன்படுத்துகின்றனர். எனினும் ஊரக பகுதிகளில் இத்தகைய வசதிகள் இல்லாததால், கிராம இளைஞர்கள் உள்ளிட்டோர் உடற்பயிற்சி செய்வது, பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வது உள்ளிட்டவற்றுக்காக வெளியிடங்களை நாட வேண்டியிருக்கிறது.

இதனை கருத்தில் கொண்டு பொதுமக்களின் பொழுது போக்கு அம்சத்திற்காகவும், உடற்பயிற்சி செய்யும் நோக்கிலும் பூங்காவுடன் கூடிய அம்மா உடற்பயிற்சிக்கூடம் அமைக்க மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி உள்பட 20 இடங்களில் அந்த பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

இதில் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் அமராவதி ஆற்றங்கரையையொட்டியவாறே இயற்கையான சூழலில் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதில் நடைபயிற்சி மேற்கொள்ள பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு உள்ளது. மேலும் சிறுவர்-சிறுமியர் உள்ளிட்டோரின் பொழுது போக்கிற்காக ஊஞ்சல், சீசா, ராட்டினம், ஏணிப்படி மற்றும் பொழுதுபோக்கு உபகரணங்களும் வைக்கப்பட்டுள்ளன.

உடலை கட்டு கோப்பாக வைக்கும் பொருட்டு கூழாங்கற்கள் பதிக்கப்பட்டு 8 வடிவிலான நடைபயிற்சி பாதையும் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர அங்கு தனியாக அம்மா உடற்பயிற்சி கூடம் ஏற்படுத்தப்பட்டு பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்ளும் விதமாக நவீன உடற்பயிற்சி உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. தற்போது அதனை உடற்பயிற்சி கூடத்தில் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதைத்தவிர போதிய தண்ணீர் வசதியுடன் கூடிய கழிவறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பூங்காவுடன் கூடிய உடற்பயிற்சிக்கூடம் அமைக்கும் பணி குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கூறியதாவது:-

தற்போதைய நாகரிக வளர்ச்சியில் வேலைப்பளுவின் காரணமாக உடல் நலத்தில் அக்கறை செலுத்துவதை பலரும் கண்டுகொள்வதில்லை. இதன் காரணமாக அரசு சார்பில் ஆங்காங்கே உடற்பயிற்சிக்கூடம் அமைத்து கொடுக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாநகராட்சியில் திறந்தவெளியில் உடற்பயிற்சி கூடம் அமைத்து பயன்பாட்டில் இருப்பதால், அதனை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் தான் கரூரில் பூங்காவுடன் கூடிய உடற்பயிற்சிக்கூடம் 20 இடங்களில் அமைக்கப்படுகிறது. இதில் பூங்கா அமைக்க ரூ.20 லட்சமும், அதனுள் உடற்பயிற்சி கூடம் அமைக்க ரூ.10 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பணிகள் முடிந்ததும் இவை உடனடியாக பயன்பாட்டுக்கு வரும். உடற்பயிற்சிக்கூடத்தை பயன்படுத்தும் இளைஞர்கள், இளம்பெண்கள் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையினை தாங்களாகவே நிர்ணயித்து அதன் பராமரிப்பினை மேற்கொள்ள வழிவகை செய்யப்படும். இதைத்தவிர பூங்காவில் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். இந்த பூங்காக்கள் பயன்பாட்டுக்கு வந்ததும் மக்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்தனர். 
Tags:    

Similar News