முத்துப்பேட்டை பகுதியில் கோவில் நிலத்தில் மணல் அள்ளிய லாரி பறிமுதல் - டிரைவர் கைது
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் சட்டவிரோதமாக மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இதில் இப்பகுதியில் செல்லும் ஆறுகளின் அருகே சிலர் மணல் விற்பனை நடத்தி வருகின்றனர்.
இதில் அதிகளவில் தம்பிக்கோட்டை பகுதியில் தான் கடந்த ஓராண்டாக்கு மேலாக மணல் கடத்தல் சம்பவம் நடந்து வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனால் மணல் கடத்திய ஏராளமான லாரிகள், டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் சற்குணநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் இடும்பவனத்தை சுற்றி ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் நிலங்கள் உள்ளது. இதில் கட்டிடத்திற்கு தேவையான மணல்கள் உட்பட சிலிக்கான், சிலிக்கேட் மணல்களும் பரவலாக உள்ளது. இதனை அப்பகுதியை சேர்ந்த சிலர் ரகசியமான கடத்தி விற்பனை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் இப்பகுதியில் மணல் கடத்தி வருவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா இடும்பாவனம் கடைத் தெருவில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்தனர். அதனை ஓட்டி வந்த நீடாமங்கலம் பிடாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் விக்னேஷ்குமார்(24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.