செய்திகள்
திண்டுக்கல் அருகே எலக்ட்ரிக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை
திண்டுக்கல் அருகே எலக்ட்ரிக் கடையின் பூட்டை உடைத்து பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் அருகே ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலை மார்க்கெட் அருகே எலக்ட்ரிக் கடை வைத்திருப்பவர் உமா ரமணன் (வயது34). விருப்பாச்சியை சேர்ந்தவர். நேற்று வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் கடையை மூடி சென்றார். நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் எலக்ட்ரிக் கடை முன்பு இருந்த சி.சி.டி.வி. கேமிராவை உடைத்தனர். மேலும் பக்கத்து வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமிராவை திசை திருப்பி வைத்து விட்டு கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.
கடையில் இருந்த பொருட்களை அள்ளிச் சென்றனர். பணம் எதுவும் வைத்து செல்லாததால் தப்பியது. இன்று காலை பக்கத்து கடைக்காரர் உமா ரமணியின் கடை பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அவருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்து பார்த்தபோது பொருட்கள் கொள்ளைபோனது தெரியவந்தது.
இது குறித்து ஒட்டன் சத்திரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கடையில் இருந்து ஒட்டன் சத்திரம் பஸ் நிலையம் வரை சென்று அந்த நாய் நின்றது. அதன்பின்னர் கொள்ளையர்கள் எங்கு சென்றனர் என்பது தெரியவில்லை. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.