செய்திகள்
நெட்டப்பாக்கத்தில் மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தற்கொலை
நெட்டப்பாக்கத்தில் மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேதராப்பட்டு:
நெட்டப்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்தவர் சிங்காரம் (வயது 58). கூலித்தொழிலாளி. இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். மகன்களுக்கு திருமணமாகி அவர்கள் தனித்தனியே வசித்து வருகின்றனர்.
இதற்கிடையே சிங்காரத்துக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மதுகுடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இதன் காரணமாக கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணவன் - மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டபோது சிங்காரத்திடம் கோபித்துக் கொண்டு சாந்தி வில்லியனூரில் வசிக்கும் தனது மூத்த மகன் வீட்டுக்கு சென்று அங்கேயே தங்கி இருந்தார்.
மனைவி கோபித்து சென்றதால் சாப்பாட்டுக்காக சிங்காரம் அதே பகுதியில் உள்ள தனது அண்ணன் கண்ணன் வீட்டில் வசித்து வந்தார். ஆனாலும், மனைவி கோபித்து சென்றதால் சிங்காரம் மனவருத்தத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த சிங்காரம் நேற்று தனது அண்ணன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.