பேனருக்கு பதில் ஹெல்மெட் வழங்கினால் அவர்களே உண்மையான காப்பான்
நெல்லை:
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் சுபஸ்ரீ கடந்த சில நாட்களுக்கு முன்பு பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் சாலையில் செல்லும் போது அங்கு வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர் காற்றில் சரிந்து அவர் மீது விழுந்தது. இதில் நிலை தடுமாறி சாலையில் விழுந்த அவர், பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த சென்னை ஐகோர்ட், பேனர் வைப்பதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் அனுமதியின்றி பேனர் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் தங்களது தொண்டர்கள் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர். அரசியல் கட்சிகள் மட்டுமின்றி சினிமா நடிகர்களும் தங்களது ரசிகர்களுக்கு பேனர்கள் வைக்க வேண்டாம் என கட்டளையிட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து சென்னையில் நேற்று நடந்த ‘காப்பான்’ பட பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா பேசும் போது, ‘ரசிகர்கள் என் மீது உள்ள அன்பை காட்டு வகையில் எனக்கு, எனது கவனத்தை கவரும் வகையில் கட்-அவுட்டுகள், பேனர்கள் வைக்கிறார்கள். இனிமேல் எனது ரசிகர்கள் யாரும் கட்-அவுட், பேனர்கள் வைக்க வேண்டாம்’ என கேட்டுக் கொண்டார்.
அவரது கோரிக்கையை ஏற்று நெல்லை மாவட்ட தலைமை சூர்யா இளைஞரணி நற்பணி இயக்கத்தினர் விரைவில் வெளியாக இருக்கும் சூர்யாவின் புதிய திரைப்படமான ‘காப்பான்’ வெளியீட்டு நாளில் டிஜிட்டல் பேனர்கள் வைக்க மாட்டோம் என அறிவித்துள்ளனர்.
அதற்கு பதிலாக புதிய போக்குவரத்து விதிகள் அமுலாகி உள்ள தற்போதைய சூழலில் பொதுமக்களுக்கு 200 ஹெல்மெட்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். நடிகர் சூர்யா ரசிகர்களின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப் பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாநகர சட்டம்-ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனர் அர்ஜுன் சரவணன் டுவிட்டர் மூலம் பாராட்டியுள்ளார். துணை கமிஷனர் வெளியிட்டிருந்த டுவிட்டில் ‘புதிய திரைப்படம் வெளியாகும் போது பிளக்ஸ் பேனர்கள், கட்- அவுட்கள் வைப்பதற்கு பதில் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் தரமான ஹெல்மெட் வழங்கினால் அவர்களே உடனடியாக உண்மையான காப்பான்’ என பதிவிட்டுள்ளார்.