களியக்காவிளை அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு
நாகர்கோவில்:
களியக்காவிளை அருகே அதன்கோடு பகுதியை சேர்ந்தவர் செல்லக்கண். இவரது மனைவி செல்லம்மாள் (வயது 70).
இவர் நேற்று அந்த பகுதியில் குளிக்கச் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் செல்லம்மாள் கழுத்தில் கிடந்த 1½ பவுன் நகையை பறித்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து செல்லம்மாள் களியக்காவிளை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சொர்ணலதா வழக்கு பதிவு செய்து நகையை பறித்துவிட்டு தப்பியோடிய வாலிபர்களை தேடி வருகிறார்.
இரணியல் அருகே காரங்காடு கடுவான்விளை பகுதியை சேர்ந்தவர் சுதாகரன். இவரது மனைவி அனிதாகுமாரி. இவர் குளச்சல் அரசு போக்கு வரத்துக்கழக பணிமனையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
நேற்று இரவு வேலை முடிந்து அனிதாகுமாரி வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். பேயன்குழி பஸ் நிலையத்தில் இறங்கி சென்ற போது மர்மநபர்கள் அனிதா குமாரி முகத்தில் மிளகாய் பொடியை தூவினர். பின்னர் அவரது கழுத்தில் கிடந்த 10½ நகையை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து அவர் இரணியல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அனிதாகுமாரி தினமும் வீட்டிற்கு நடந்து செல்வதை நோட்டமிட்டே மர்மநபர்கள் நகையை பறித்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே இந்த கொள்ளைச் சம்பவத்தில் உள்ளூர் கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.