செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நாளை திறப்பு: முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

Published On 2019-09-14 09:17 GMT   |   Update On 2019-09-14 09:17 GMT
பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பிசான பருவத்திற்கான முன்னேற்பாடு பணிகளை கவனிக்க ஏதுவாக முன் கூட்டியே பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயப் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தாமிரபரணி ஆற்றின் கீழுள்ள எட்டு அணைக் கட்டுகள் மற்றும் 11 கால்வாய்கள் மூலம் பாசன வசதி பெறும் பயிர்களை காக்கவும், குடிநீர் தேவைகளுக்காகவும் மற்றும் பிசான பருவ முன்னேற்பாடு பணிகள் செய்ய ஏதுவாகவும், சிறப்பு நிகழ்வாக 15.9.2019 முதல் 4.10.2019 முடிய 20 நாட்களுக்கு 2500 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

மேற்கண்ட கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் தாமிரபரணி பாசனத்தின் 6 அணைக்கட்டுகளின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 7 கால்வாய்கள் மூலம் 40,000 ஏக்கர் பாசன நிலங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 2 அணைக்கட்டுகளின் கீழுள்ள 4 கால்வாய்கள் மூலம் 46107 ஏக்கர் பாசன நிலங்கள் ஆக மொத்தம் 86107 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசன வசதி பெறும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News