செய்திகள்
எடப்பாடி பழனிசாமி - துரைமுருகன்

“தி.மு.க. பற்றி விமர்சனம் செய்ய எந்த தகுதியும் இல்லை” - எடப்பாடி பழனிசாமி மீது துரைமுருகன் பாய்ச்சல்

Published On 2019-09-14 00:50 GMT   |   Update On 2019-09-14 00:50 GMT
தி.மு.க.வை பற்றி எதிர்மறை விமர்சனம் செய்ய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த தகுதியும் இல்லை என்று துரைமுருகன் கூறியுள்ளார்.
சென்னை:

தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“நீர்மேலாண்மைக்கு தி.மு.க. ஆட்சியில் என்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன?” என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் அளித்த பேட்டியில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அவர் வகிக்கும் துறையில், அவருக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாத ஒரு முதல்-அமைச்சரை, பொதுப்பணித்துறை தனது அமைச்சராகப் பெற்றிருப்பது கண்டு தமிழக மக்கள் வெட்கமும் வேதனையும் கொள்கிறார்கள்.

நீர்மேலாண்மைத் திட்டங்கள் நதிநீர்த் திட்டங்கள் நீர்த்தேக்கத் திட்டங்கள் என்று தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட எண்ணற்ற திட்டங்களைப் பற்றிய விழிப்புணர்ச்சி சிறிதும் இல்லாமல், கமிஷன் கலாசாரத்தில் முழுக்க முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்ற நிலையில் இருந்து கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக அமைந்தது தமிழகத்திற்குக் கெட்ட வாய்ப்பாகும்.

1967 முதல் 2011 வரை 41-க்கும் மேற்பட்ட அணைகளைக் கட்டி, தமிழகத்தின் நீர்மேலாண்மைக்கு மிகப்பெரிய கட்டமைப்பை உருவாக்கியது தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராகவும், நான் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்த தி.மு.க. ஆட்சி என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். நதிநீர் இணைப்புத் திட்டங்களின் முன்னோடி தி.மு.க. ஆட்சிதான்.

2006 முதல் 2011 வரை ரூ.62,349 கோடி முதலீடுகளைப் பெற்று, அதன் மூலம் 2,35,464 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகளை வழங்கியது தி.மு.க. அரசு. தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலும், அம்பத்தூர் முதல் காஞ்சீபுரம் வரையிலும் நிறுவப்பட்டுள்ள தொழிற்சாலைகள் தி.மு.க. ஆட்சியின் சாதனைகளுக்கான சாட்சி. “தி.மு.க. ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிட்டீர்கள்” என்று தி.மு.க. தலைவரைப் பார்த்து ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

443 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டு, ரூ.5.42 லட்சம் கோடி முதலீடு வரப்போகிறது என்று பகட்டு அறிவிப்பை வெளியிட்டு, இப்போது ரூ.14 ஆயிரம் கோடி மட்டுமே பெற்றுள்ள பழனிசாமிதான் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி வெளியாகி இருக்கும் இந்த ரூ.14 ஆயிரம் கோடி விவகாரத்தை முதல்-அமைச்சரால் மறுக்க முடியுமா? மறுக்கட்டுமே பார்க்கலாம்.

10 அமைச்சர்களை அழைத்துக் கொண்டு முதலீடு பெற ‘உலகச் சுற்றுலா’ போன அவர்தான், தமிழக மக்களுக்கு வெள்ளை அறிக்கை வழங்க வேண்டும். வெள்ளை அறிக்கை கேட்பதோ, கொடுப்பதோ கெட்ட காரியம் அல்ல.

இவர் வெள்ளை அறிக்கை கொடுப்பதற்கு, சட்டியில் எதுவும் இருந்தால் தானே அகப்பையில் வரும். அரசு நிர்வாகத்தின் அடிப்படை இலக்கணம் கூடத் தெரியாமல் ஆட்சி நடத்தும் அவர் தி.மு.க.வைப் பார்த்து கேள்வி கேட்பது வேடிக்கையாக இருக்கிறது.

இந்தியா முழுவதும் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் பொருளாதாரப் பின்னடைவு, தொழில் பின்னடைவு இல்லை என்று முதல்-அமைச்சர் பீற்றிக் கொள்வதை உண்மை என்று யாரும் ஏற்கமாட்டார்கள்.

கோவையிலும், திருப்பூரிலும் கேட்டால் சொல்வார்கள், எத்தனை தொழில்கள் மூடப்பட்டிருக்கின்றன, எத்தனை ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர் என்ற விவரங்களைச் சொல்வார்கள்; பத்திரிகையாளர்களைக் கேட்டாலும் பட்டியல் இட்டுத் தருவார்கள்.

எதற்காக முதல்-அமைச்சர் “பொருளாதார நிபுணராக” வேடம் கட்டிக்கொள்ள வேண்டும்? சற்றும் பொருத்தமில்லாத வேடம் அது. எதையும் முழுமையாகத் தெரிந்துகொண்டு சொல்ல வேண்டும்; தெரியாத தகவல்களுக்குள் நுழையக் கூடாது.

“ஜெயலலிதாவின் வாரிசு” என்று யாரோ ஒருவர் சொன்னவுடன், அதை ‘அருள் வாக்கு’ என்றெண்ணி, தாவிக் கூத்தாடிக் கொண்டாடக் கூடாது. தமிழக மக்கள் சொல்லிப் பாராட்ட வேண்டும்; அதுவரை காத்திருக்கப் பழக வேண்டும்.

ஆகவே, “மாநிலத்திற்குள் ஓடும் நதிகளை இணைப்பது”, “காவிரி டெல்டா கால்வாய்களைத் தூர் வாருவது”, “ஏரி குளங்களைத் தூர் வாருவது”, “முதலீடுகளைப் பெறுவது”, “தொழிற்சாலைகளை அமைப்பது” உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் படுதோல்வி அடைந்திருக்கும் அ.தி.மு.க. ஆட்சியின் தற்போதையை முதல்-அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க. ஆட்சி பற்றியோ, முதல்-அமைச்சராக இருந்த தலைவர் கருணாநிதி பற்றியோ, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பற்றியோ, வெற்றிகரமாகத் திட்டங்களை நிறைவேற்றிய தி.மு.க. தலைவரின் வெளிநாட்டுப் பயணங் கள் குறித்தோ அரைகுறையான கேள்வி எழுப்பி, எதிர்மறை விமர்சனம் செய்ய எவ்விதத் தகுதியுமில்லை, எந்த அருகதையுமில்லை என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
Tags:    

Similar News