செய்திகள்
முதல்வர் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்- முத்தரசன் பேட்டி
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதா ஆட்சி காலத்திலும், முதல்- அமைச்சர் எடப்பாடி ஆட்சி காலத்திலும் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. அதில் பெறப்பட்ட முதலீடுகள் என்ன ஆனது என்பதை முதல்-அமைச்சர் விளக்க வேண்டும். உலகத்திலேயே இஸ்ரேலில் தான் நீர் சிக்கனம், நீர் மேலாண்மை திட்டத்தை சிறப்பாக பயன் படுத்துகிறார்கள் என்று எடப்பாடி தெரிவித்து அங்கு செல்ல உள்ளார். அவர் சென்று வரட்டும். முதல்- அமைச்சருக்கு காமராஜர் வரலாறு தெரிந்திருக்கும். முதல்- அமைச்சரின் இஸ்ரேல் பயணம், கூரை ஏறி கோழிபிடிக்க தெரியாதவன் என்ற பழமொழியை தான் சொல்ல தோன்றுகிறது.
மேட்டூர் அணையில் கடந்த ஆண்டு தண்ணீர் முழுவதும் கடலுக்கு திறந்து விட்டு தண்ணீர் இல்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோம். தற்போதும் தண்ணீர் கடலுக்கு வீணாக தான் செல்கிறது. இதுவரை டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை.
தூர்வாரும் பணியில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் நிதியை பங்கிட்டு கொள்ள தொடங்கியதால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை. ஆந்திர அரசு தனது மாநில எல்லைக்குள் பாலாற்றின் குறுக்கே 33 கிலோ மீட்டர் தூரத்தில் 22 தடுப்பணைகளை கட்டி இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் கொள்ளிடம், காவிரியில் தடுப்பணை இல்லை. இதனால் தண்ணீர் முழுவதும் கடலுக்கு செல்கிறது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட முறையில் வெளிநாடு செல்லவில்லை. அரசுமுறை பயணமாக தான் சென்றுள்ளார். எனவே அதுபற்றிய விவரத்தை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது மூடி மறைத்ததை போல இதையும் மூடி மறைக்க முயற்சிக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.