செய்திகள்
சென்னை ஐகோர்ட்

பேனர் விழுந்து இளம்பெண் பலியான விவகாரம்: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் - ஐகோர்ட் உத்தரவு

Published On 2019-09-13 11:02 GMT   |   Update On 2019-09-13 11:02 GMT
பேனர் விழுந்து இளம்பெண் பலியான விவகாரத்தில் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை:

சென்னை பல்லாவரம் அருகே சுபஸ்ரீ என்ற இளம்பெண் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையின் நடுவே வைக்கப்பட்ட பேனர் அவர் மீது விழுந்தது. இதில் நிலைகுலைந்து விழுந்த சுபஸ்ரீ, பின்னால் வந்த தண்ணீர் டேங்கர் லாரியில் சிக்கி உயிரிழந்தார். பேனர் சரிந்து விழுந்ததால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
 
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து இன்று விசாரணை நடத்தியது. சட்டவிரோத பேனர்கள் தொடர்பாக அரசுக்கும் அதிகாரிகளுக்கும் கடும் கண்டனம் தெரிவித்தனர் நீதிபதிகள்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஐகோர்ட்டில் ஆஜராகினர். அதிகாரிகளை சரமாரியாக கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தனர் நீதிபதிகள். 

இந்நிலையில், பேனர் விழுந்து இளம்பெண் பலியான விவகாரத்தில் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் கூறுகையில், பேனரில் உள்ள கலர் உங்களை நடவடிக்கை எடுக்க விடாமல் தடுத்ததா?
பேனர் விவகாரத்தில் அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொண்டது வெளிப்படையாக தெரிகிறது. தலைமைச் செயலரோ, நகராட்சி நிர்வாக செயலரோ பதில் மனுவில் கூறியது போல் செயல்படவில்லை

அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து அறிக்கை தேவை. பணியில் கவனக்குறைவு போன்றவை குறித்து அறிக்கை  தாக்கல் செய்ய வேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அரசு வசூலிக்க வேண்டும். இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தொடர்ந்து கண்காணிக்கும் என தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News