செய்திகள்
அரசின் அலட்சியத்தால் சுபஸ்ரீ உயிரிழப்பு- முக ஸ்டாலின்
சென்னையில் பேனர் சரிந்து லாரி மோதி உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:
சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ (23), கனடா செல்வதற்காக இன்று தேர்வு எழுதியுள்ளார். தேர்வு எழுதி முடித்து விட்டு பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் இருந்து பல்லாவரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சாலையின் ஓரத்தில் வைத்திருந்த பேனர் சரிந்து அவர் மீது விழுந்தது. அதனால், நிலைதடுமாறி கீழே விழுந்த அவர், பின்னால் வந்த தண்ணீர் லாரியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பள்ளிக்கரணையில் விதிமீறி வைக்கப்பட்ட பதாகைகளால் சுபஸ்ரீ உயிரிழந்து மிகுந்த வேதனைக்குள்ளாக்குகிறது.
அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை சுபஸ்ரீயின் வாழ்கையை காவு வாங்கியுள்ளது. அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது?.
இவ்வாறு முக ஸ்டாலின் கூறியுள்ளார்.