முத்தியால்பேட்டையில் மயங்கி விழுந்து மெக்கானிக் பலி
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை கணேஷ் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது45). மோட்டார் சைக்கிள் மெக்கானிக். இவரது மனைவி சுமதி (44) இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். ரமேஷ்க்கு மதுஅருந்தும் பழக்கமும் இருந்து வந்தது. இதனால் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
இதேபோல் சம்பவத்தன்றும் மனைவி வேலைக்கு சென்று விட்ட நிலையில் ரமேஷ் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். மயங்கி விழுந்த தந்தையை மகன் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ரமேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சுமதி முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.