செய்திகள்
தலைமை ஆசிரியர்

பென்னாகரம் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு - தலைமை ஆசிரியர் கைது

Published On 2019-09-10 10:35 GMT   |   Update On 2019-09-10 10:35 GMT
பென்னாகரம் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
ஏரியூர்:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் அருகே பத்ரஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட பூச்சூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக சுப்ரமணி (வயது53) என்பவரும், 7 ஆசிரியர்கள், ஆசிரியைகள் பணியாற்றி வருகிறார்கள். இந்த பள்ளி தலைமை ஆசிரியர் சில மாணவிகளை தனது அறைக்கு அழைத்து வந்நு பாலியல் தொந்தரவு செய்தாராம்.

இதை அறிந்த மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் கற்களை ரோட்டில் வைத்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த பென்னாகரம் தாசில்தார் சதாசிவம், வருவாய்த்துறை அதிகாரி ரமா, ஏரியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு, பென்னாகரம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து 5 மாணவிகளும் அவர்களது பெற்றோரும் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் லதா வழக்கு பதிவு செய்து பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியை போக்சோ சட்டத்தின்படி கைது செய்தார்.

பின்னர் சுப்பிரமணி பென்னாகரம் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு 12-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். அவரை போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

கைதான தலைமை ஆசிரியை சுப்பிரமணியை பணியிடை நீக்கம் செய்து தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி (பொறுப்பு) கணேசமூர்த்தி நடவடிக்கை எடுத்து உள்ளார்.

Tags:    

Similar News