வெவ்வேறு விபத்துக்களில் தனியார் நிறுவன மேலாளர்-முதியவர் பலி
முசிறி, தா.பேட்டை:
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 69). இவர் முசிறி அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்தார்.சம்பவத்தன்று நடைபயிற்சிக்காக அய்யம் பாளையத்தில் முசிறி - திருச்சி செல்லும் சாலையில் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத கார் மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் சுப்பிரமணியன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன் (42). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
சம்பவத்தன்று துறையூர் செல்வதற்காக காரை ஓட்டி சென்ற போது முசிறி- துறையூர் மெயின் ரோட்டில் பள்ளிநத்தம் பஸ்நிறுத்தம் அருகே வேகத்தடையில் சென்ற போது முன்னால் சென்ற லாரி திடீர் பிரேக் போட்டதால் பின்னால் வந்த கார் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் கருப்பண்ணன் படுகாயம் அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஜெம்புநாதபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹாரூண் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கருப்பண்ணனை மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.