திருமங்கலம் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்
திருமங்கலம்:
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சோளங்குருணி கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக அன்றாடம் உபயோகிக்கும் உப்புத் தண்ணீர் மற்றும் குடிநீர் வராததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக திருப்பங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் வலையங்குளம்- சோளங்குருணி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த பெருங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கடந்த ஒரு மாத காலமாக தண்ணீர் வராத நிலையில் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை என்றும் உடனடியாக தங்களுக்கு குடிநீர் பிரச்சினை தீர வேண்டும் என பொது மக்கள் கோஷங்கள் எழுப்பினர்.
போலீசார் பேச்சு வார்த்தை உடன்படாததால் மறியல் போராட்டம் ஒரு மணி நேரம் நீடித்தது மேலும் போலீசாருடன் பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து இந்த பகுதியில் குடிநீர் பிரச்சினையால் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.